வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2015 (21:39 IST)

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி மாற்றப்பட்டது குறித்து கருணாநிதி, ராமதாஸ் கேள்வி

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை திரேந்திர ஹிராலா வகேலா, ஒடிஷா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.
 

 
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரேந்திர ஹிராலா வகேலா ஞாயிற்றுக்கிழமையன்று ஒடிஷா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
 
ஒடிஷா மாநில தலைமை நீதிபதி பதவி கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து காலியாக இருக்கும் நிலையில், திடீரென ஞாயிற்றுக்கிழமையன்று இந்த பதவிமாற்றம் செய்யப்பட்டிருப்பது ஏன் என கருணாநிதி கேள்வியெழுப்பியுள்ளார்.
 
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு வழக்கு நடந்துவரும் நிலையிலும், அந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டிய நேரம் நெருங்கும் நிலையிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கருணாநிதி கூறியுள்ளார்.
 
பவானி சிங்கின் நியமனம் தவறு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால் புதிய வழக்கறிஞரை கர்நாடக மாநில தலைமை நீதிபதிதான் நியமிக்க வேண்டியிருக்கும் என்றும், தற்போது ஜெயலலிதா வழக்கை விசாரித்துவரும் நீதிபதி குமாரசாமி வரும் ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெறவிருப்பதால், புதிய நீதிபதியையும் அவர்தான் நியமிக்க வேண்டியிருக்கும் என்றும் கருணாநிதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
 

 
இது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்திருக்கும் அறிக்கையில், "ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கியது, அவரது மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை யாரும் கேட்காமலேயே 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டது போன்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவின் நடவடிக்கைகள் நீதித்துறை வட்டாரங்களில் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகிருக்கின்றன. இந்த நிலையில் வகேலா மாற்றப்பட்டிருப்பது இந்த ஐயங்களை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.