வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2015 (19:54 IST)

பாகிஸ்தானின் மனித உரிமை செயற்பாட்டாளர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளரான சபீன் மெஹ்மூத் கராச்சி நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 

 
வாகனத்தில் வந்த ஆயுததாரிகள் வாகனத்தைச் செலுத்தியபடியே அவரைச் சுட்டுக் கொன்றனர்.
 
ஷபீன் மெஹ்மூத் தன் தாயுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சுடப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவர் தயாரும் காயமடைந்தார்.
 
இதற்கு முன்பாக பல முறை அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்திருக்கின்றன.
 
ஷபீன் மெஹ்மூத் டி2எஃப் என்று அறியப்பட்ட தி செகண்ட் ஃப்ளோர் என்ற அறக்கட்டளையின் இயக்குனராக செயல்பட்டுவந்தார்.
 
இந்த அமைப்பு, மனித உரிமை தொடர்பாக தொடர்ந்து கருத்தரங்குகளை நடத்திவந்தது. இதன் மூலம் ஒரு உணவகமும் புத்தகக் கடையும் நடத்தப்பட்டுவந்தன. இங்கே, கராச்சியின் செயற்பாட்டாளர்கள் மாணவர்கள் சந்திப்பது வழக்கமாக இருந்தது.
 
பலூசிஸ்தானில் நடக்கும் சித்திரவதைகள் பற்றிய கருத்தரங்கு டி2எஃப்பில் நடைபெற்றது. லாகூரில் ஒரு பல்கலைக்கழகத்தில் இந்தக் கருத்தரங்கிற்கு, அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, இங்கே நடைபற்றது.
 
ஈரானை ஒட்டியுள்ள பலூசிஸ்தான் பகுதியில், தாலிபான் போராளிகள், பலூசிஸ்தான் பிரிவினைவாதிகள் உள்ளிட்டவர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
 
இந்தக் கருத்தரங்களிருந்து புறப்பட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு, சபீன் மெஹ்மூதும் அவரது தாயாரும் சுடப்பட்டனர்.
 
சபீன் மெஹ்மூத் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்தார் என பாகிஸ்தானின் டான் நாளிதழ் தெரிவித்துள்ளது. அவர் ஐந்து முறை சுடப்பட்டுள்ளார். அவருடைய தாயார் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
 
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதற்கு முன்பாக, பாகிஸ்தானின் தாலிபான் சபீனை பலமுறை கொலைமிரட்டல் விடுத்திருக்கிறது.