வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 12 ஆகஸ்ட் 2014 (06:10 IST)

முன்னாள் போர் வலயங்களில் விளையாட்டுத் திறமைகளின் எதிர்காலம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் அண்மையில் நடந்துமுடிந்த 20-வது காமன்வெல்த் விளையாட்டு விழாவின்போது விளையாட்டுத் துறை அமைச்சர்களுக்கிடையிலான கருத்தரங்கொன்று நடந்தது.
 
முப்பது ஆண்டு கால போருக்குப் பின்னர் இலங்கை விளையாட்டுத்துறை ஊடாக இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைவதாக இலங்கை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இந்த கருத்தரங்கில் விளக்கமளித்திருந்தார்.
 
வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்திசெய்து விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவித்து வருவதாக 71 அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலக விளையாட்டுத் துறை அமைச்சர்கள் மத்தியில் இலங்கை அமைச்சர் பெருமைப்பட்டுக் கொண்டார்.
 
'முன்னாள் போர் வலயங்களைச் சேர்ந்த இளைஞர்களை உள்வாங்கிக் கொண்டு வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு அரசாங்கம் எங்களைக் கேட்டுக் கொண்டது. அதற்காக நாங்கள் தேர்ந்தெடுத்த வழிமுறை தான் விளையாட்டுத்துறை' என்றார் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே.
 
இம்முறை கிளாஸ்கோ விளையாட்டு விழாவில் 104 விளையாட்டு வீர-வீராங்கனைகள் இலங்கையிலிருந்து கலந்துகொண்டிருந்தனர். மேலதிகமாக 45 விளையாட்டு அதிகாரிகளும் வந்திருந்தனர்.
 
ஆனால், இவர்களில் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் விளையாட்டு வீர வீராங்கனைகள் எவரையும் கிளாஸ்கோவில் காணக்கிடைக்க வில்லை.
 
ஆனால், உள்ளூர் தேசிய மட்டப் போட்டிகளில் வடக்கு கிழக்கு இளைஞர்கள் திறமைகளை வெளிப்படுத்திவருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
இலங்கையின் முன்னாள் போர் வலயங்களில் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க அரசு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்று இலங்கை அதிகாரிகளிடம் எழுப்பப்பட்ட கேள்விகள் அடங்கிய பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.