வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (18:52 IST)

வெற்றி வாய்ப்புள்ள கூட்டணியிலேயே இருக்க விரும்புகிறோம்: ஜவாஹிருல்லா

வெற்றி வாய்ப்புள்ள ஒரு கூட்டணியில் இருக்க விரும்புவதாலேயே மக்கள் நல கூட்டியக்கத்திலிருந்து விலகியிருப்பதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்திருக்கிறார்.
 
இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய அவர், தி.மு.க., அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிகளைத் தவிர பிற கூட்டணிகள் வெற்றிபெறும் வாய்ப்பு மிகக் குறைவு என்று கூறினார்.
 
மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் நோக்கில் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்து மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் ஒரு அமைப்பை சில நாட்களுக்கு முன்பாக உருவாக்கின.
 
தமிழ்நாட்டில் வரும் 2016ல் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்தக் கூட்டணி, அரசியல் கூட்டணியாகவும் மாறும் என அந்த இயக்கத்தில் இடம்பெற்றிருந்த சில தலைவர்களும் பேசிவந்தனர்.
 
இந்தக் கூட்டணித் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் அக்டோபர் 5ஆம் தேதி திருவாரூரில் நடக்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் இந்தக் கூட்டணி தேர்தல் கூட்டணியாகவும் அறிவிக்கப்படும் என வைகோ தெரிவித்திருக்கிறார்.
 
இந்த நிலையில்தான் இந்தக் கூட்டணியில் இருந்து விலகுவதாக மனித நேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

கூட்டணியை அறிவிக்கும்போது மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுப்பதற்காகவே இந்த இயக்கம் அறிவிக்கப்பட்டதாகவும் ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ போன்றவர்கள் சில கூட்டங்களில் இதைத் தேர்தல் கூட்டணியாக முன்னிறுத்தியதாகவும் அதில் தங்களுக்கு ஒப்புதல் இல்லையென்றும் ஜவாஹிருல்லா கூறினார்.