1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 18 டிசம்பர் 2014 (08:56 IST)

ஃபிஃபாவின் தார்மீக நெறிமுறைகள் குழுவின் தலைவர் இராஜினாமா

சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவில் தார்மீக நெறிகள் மீறப்படுவதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கும் குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து மைக்கேல் கார்சியா விலகியுள்ளார்.
எதிர்வரும் 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளை நடத்தும் உரிமைகளை, உலகளவில் கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் ஃபிஃபா வழங்கியது தொடர்பான விசாரணையை அவர் தலைமையேற்று நடத்தி வந்தார்.
 
அப்போட்டிகள் வழங்கப்பட்டதில் ஊழல் இடம்பெற்றது என்று எழுந்த குற்றச்சாட்டுக்களையே அவர் விசாரித்து வந்தார். ஃபிஃபாவின் உயர்மட்டத்தில் தலைமைத்துவம் இல்லை என்று மைக்கேல் கார்சியா தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
தார்மீக நெறிகள் குறித்த குழுவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனிய நீதிபதி யோகிம் எக்ரெட் மீது தான் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், தனது பணிகளுக்கு தவறான அர்த்தம் கற்பித்தார் என்றும் கார்சியா மேலும் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, ஃபிஃபாவின் தார்மீக நெறிகளுக்கான குழு, கார்சியாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளது. அடுத்த இரண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவிலும், 2022 ஆம் ஆண்டு கத்தாரிலும் இடம்பெறவுள்ளன.