1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2015 (19:42 IST)

'ஆண் வயாக்ரா' - ‘பெண் வயாக்ரா’: என்ன வேறுபாடு?

பெண்களின் பாலியல் உணர்வைத்தூண்டும் புதிய மருந்து ஒன்றுக்கு அமெரிக்க அரசாங்கம் முதல் முறையாக அனுமதியளித்திருக்கிறது.
 

 
அதன் பெயர் ஃபிலிபான்செரின். ஆனால் சந்தையில் பெரும்பாலும் இந்த மருந்து வேறொரு பெயரால் விற்கப்படுவதையே நீங்கள் பார்க்க நேரலாம்.
 
“பெண்களுக்கான வயாக்ரா” என்பதே இதற்கான பிரபல பெயராக இருக்கக் கூடும்.
 
ஆனால் ஆண்களின் பாலியல் இச்சையைத் தீர்க்க உதவும் புகழ்பெற்ற வயாக்ரா மாத்திரையும் பெண்களுக்கான இந்த புதிய மாத்திரையும் ஒன்றா?
 
இல்லை. அப்படி சொல்ல முடியாது.
வயாக்ரா: ஆண்களுக்கானது. பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதன் மூலம் அதன் விறைப்புத்தன்மையை அதிகப்படுத்தியும், நீட்டித்தும் ஆண்களில் பாலியல் இச்சைக்கு செயல்வடிவம் கொடுக்க வயாக்ரா உதவுகிறது.
 
மாத்திரையை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் உடனடியாக கைமேல் பலன் தருகிறது. வீரியம் மிக்க மருந்து. பயன்படுத்துபவர்கள் உடனடி பலனை அனுபவிப்பதால், பெரும்பாலும் மகிழ்ச்சியடைவதாக கூறுகிறார்கள்.
 
ஃபிலிபான்செரின்: பெண்களுக்கானாது. முளையின் வேதியல் மாற்றங்களை அதிகரிக்கச் செய்கிறது. மாதக்கணக்கில் இந்த மாத்திரைகளை உட்கொண்டால் தான் பலன் கொடுக்க ஆரம்பிக்கும்.
 
இதன் பயனாளர்கள் இதனால் சுமாரான பலன் கிடைக்கிறது என்றே இதுவரை தெரிவித்திருக்கிறார்கள். பெண்களுக்கான இந்த மாத்திரைக்கு அமெரிக்க அரசு இதற்கு முன்னர் இரண்டு முறை அனுமதி தர மறுத்திருக்கிறது.
 
குறைவான பலன் மற்றும் தலைசுற்றல் உள்ளிட்ட பல்வேறு பக்கவிளைவுகள் இருந்ததாக அப்போது காரணம் கூறப்பட்டது. ஆனாலும் அமெரிக்காவில் வாழும் பெண்களுக்கு இது பயன்படும் என்று இதை ஆதரிக்கும் செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
 
காரணம் அமெரிக்க ஆண்களின் பாலியல் குறைபாடுகளுக்குத் தீர்வாக 26 வகையான சிகிச்சை முறைகளை அமெரிக்க அரசு இதுவரை அங்கீகரித்துள்ளது. அவைகள் அமெரிக்க ஆண்களுக்கு பயன்பட்டும் வருகின்றன.
 
ஆனால் அமெரிக்கப் பெண்களின் பாலியல் செயலின்மை மற்றும் குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய, அமெரிக்க அரசால் அனுமதிக்கப்பட்ட மருந்துகள் எவையும் அமெரிக்காவில் இதுவரை இல்லை.
 
அந்த பின்னணியில் இந்த புதிய மருந்து அமெரிக்கப் பெண்களுக்கு பெரிதும் பயன்படும் என்பது இதை ஆதரிக்கும் பெண்ணிய செயற்பாட்டாளர்களின் வாதமாக இருக்கிறது.