1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (13:54 IST)

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தீர்ப்பு தேதி மாற்றம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் தீர்ப்பு, செப்டம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991-96ஆம் ஆண்டு காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, பெங்களூரில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
 
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
தீர்ப்பு வழங்கப்படும் தினத்தன்று, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் திங்கட்கிழமையன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், முல்லைப் பெரியாறு விவகாரம், விடுதலைப் புலிகள் விவகாரம் ஆகியவற்றால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், சிறப்பு நீதிமன்றம் இயங்கும் இடத்தை பரப்பன அக்ரஹாரத்திற்கு மாற்ற வேண்டுமெனக் கோரியிருந்தார்.
 
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கல் குன்ஹா, இதன் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடக்குமெனத் தெரிவித்தார்.
 
செவ்வாய்க்கிழமையன்று அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக தீர்ப்பு வழங்கப்படும் தினத்தன்று பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் செயல்படும் என்றும் அங்கே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஏதுவாக, தீர்ப்பு வழங்கும் தேதி செப்டம்பர் 20ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 27ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும் நீதிபதி அறிவித்தார்.
 
2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெயலலிதா இந்த வழக்கில் ஆஜரானபோது, பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறை வாளாகத்திற்கு நீதிமன்றம் மாற்றப்பட்டு, அங்குதான் அவர் ஆஜரானார்.
 
தற்போது, இந்தச் சிறப்பு நீதிமன்றம் பெங்களூர் நகர சிவில் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வருகிறது.