வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 பிப்ரவரி 2021 (14:35 IST)

"தமிழ் வாழ வேண்டுமென்றால், இந்துத்வா வெல்ல வேண்டும்" - தேஜஸ்வி சூர்யா பேச்சு

திராவிட முன்னேற்ற கழகத்தை "இந்து விரோத" கட்சி என்று குறிப்பிட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணியின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, தேர்தலில் மக்கள் திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றும், பாஜக மட்டுமே இந்தியாவின் அனைத்து பிராந்திய மொழிகளையும் மதித்து, அவற்றின் வளர்ச்சிக்கு வித்திடுவதாக தெரிவித்துள்ளார் என்கிறது ஏ.என்.ஐ செய்தி முகமை.

தமிழக பாஜகவின் இளைஞரணி சார்பில் சேலத்தில் நேற்று நடைபெற்ற இந்த மாநாட்டில் அந்த கட்சியின் இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, பாஜக மாநிலத் தலைவர் முருகன், துணைத் தலைவர்கள் துரைசாமி, அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, பொதுச் செயலாளர்கள் ராகவன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

அப்போது பேசிய தேஜஸ்வி, "தி.மு.க ஒரு மோசமான, கொடூரமான சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது. இது இந்துக்களுக்கு எதிரானது. ஒவ்வொரு தமிழரும் ஒரு பெருமைமிக்க இந்து. இது நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கோயில்களைக் கொண்ட புனித பூமி. தமிழ்நாட்டின் ஒவ்வோர் அங்குலமும் புனிதமானது. ஆனால் திமுக இந்து எதிர்ப்பு கட்சி, எனவே நாம் அதை தோற்கடிக்க வேண்டும்" என்று கூறியதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தேஜஸ்வி, தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழியின் உணர்வை பாஜக பிரதிபலிப்பதாக கூறினார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "இந்தியாவின் அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் மதிப்பளித்து, அதன் வளர்ச்சிக்கு வித்திடும் ஒரே கட்சி பாரதிய ஜனதா மட்டுமே. தமிழ் வாழ வேண்டுமென்றால், இந்துத்வா வெற்றிபெற வேண்டும். கன்னடம் வெல்ல வேண்டுமென்றால், இந்துத்வா வெற்றிபெற வேண்டும். தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழியின் உணர்வை பாஜக பிரதிபலிக்கிறது" என்று கூறினார்.

தி.மு.க-வை கடுமையாக சாடிய தேஜஸ்வி, தி.மு.கவுக்கு குடும்பமே கட்சி, ஆனால் பாஜகவுக்கு கட்சியே குடும்பம் என்று கூறினார்.

"திமுகவின் கடுமையான இந்து விரோத சித்தாந்தத்துக்கு சவால் விடுக்க வேண்டும். அதிகாரத்தில் இருக்கும்போது அவர்கள் இந்து அமைப்புகள் மற்றும் இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்படுகின்றனர். ஆனால் அதிகாரத்திற்கு வெளியே இருக்கும்போது அவர்கள் இந்துக்களின் வாக்குகளை நாடுகிறார்கள். இது இனியும் தொடராது" என்று அவர் மேலும் கூறியதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.