வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2016 (18:02 IST)

மர்ம மனிதரை மகிழ்விக்க தோழியை கத்தியால் குத்திய சிறுமிகளின் நீதிமன்றப் போராட்டம்

குற்றம் செய்வதற்கு முன்னர், தன்னுடைய பிறந்த நாளில் இரவு வீட்டில் தங்குவதற்கு அவருடைய நண்பர்களை மோர்கன் கெசர் அழைத்திருக்கிறார்.
 

 
இணையதளத்தில் கொடூர கதாபாத்திரமாக தோன்றும் `சிலென்டர் மனிதரை' மகிழ்ச்சிப்படுத்துவதற்காக தன்னுடைய 12 வயது வகுப்புத் தோழியை கத்தியால் குத்தியதாக இரண்டு சிறுமிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர், புத்தி சுவாதீனமில்லாதவர் என்ற காரணத்தைக் காட்டி குற்றமற்றவர் என முறையிடப்பட்டுள்ளது.
 
இணைய வெளியில் உலாவரும் கொடூரமான கற்பனை கதாபாத்திரத்தை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு தோழியை 19 முறை கத்தியால் குத்தி தாக்கிய அவலம் அமெரிக்காவின் விஸ்கான்சினில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தேறியது.
 
புத்தி சுவாதீனமில்லாதவர் என்று கூறியுள்ள மோர்கன் கெய்சர் என்ற சிறுமியிடம் அதற்கான பரிசோதனையை மேற்கொள்ள விஸ்கான்சின் நீதிபதி ஒருவர், இரண்டு மருத்துவர்களை இப்போது நியமித்திருக்கிறார்.
 
கொலை முயற்சி:
 
14 வயதாகும் மோர்கன் கெய்சர், அனிஸ்சா வேயர் இருவரும் வயது வந்தோராக கருதப்பட்டு, கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
 
குற்றம் உறுதியானால் இந்த சிறுமியர் தசாப்தங்களை சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.
 
உயிர் பிழைத்த அதிசயம்:
 
இவர்களால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி 2014 ஆம் ஆண்டு 19 முறை கத்தியால் குத்தப்பட்டாலும் உயிர் தப்பிவிட்டார்.
 
ரத்தம் வழியும் நிலையில், அவர் காட்டிலிருந்து தவழ்ந்து தப்பி வருவதை வாகெஷா நகரத்திற்கு அருகில் மிதிவண்டியில் சென்றவர் பார்த்தார். அவருடைய கைகள், கால்கள் உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
 
இணைய தளத்தில், கொடூரமான கற்பனை கதாபாத்திரமான சிலென்டர் மனிதருக்கு அர்ப்பணிக்கும் விதமாக இந்த இரண்டு சிறுமிகளும் பல மாதங்களாக திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
தோழியைக் கொலை செய்து, அவர்களுடைய நம்பகரமான பண்பை காட்டி, அவர்கள் மனங்களில் பதிந்திரந்த கற்பனை (அனுமான) உருவமான சிலென்டர் மனிதரை போல மாறக்கூடிய விருப்பத்தை பற்றி இந்த சிறுமியர் உரையாடலில் பேசியிருக்கின்றனர் என போலிசார் தெரிவித்தனர்.
 

 
சிலென்டர் மனிதர் யார்?:
 
இணையத்தில், ஓவியங்கள் மற்றும் கட்டுரைகளில் ஒல்லியாக நிழல் உருவமாக தோன்றும் கற்பனை கதாபாத்திரம்ன் சிலென்டர் மனிதர்.
 
முதுகிலிருந்து முளைக்கும் விழுது போன்ற கொம்புடைய கதாபாத்திரம் என்று சிலரும், கறுப்பு உடை அணிந்த வெளிறிய முகம் கொண்டவர் என்று பலரும் கூறுகின்றனர்.
 
வாசிப்பவர்களை அதிர்ச்சியூட்டுவதற்காக அல்லது பயப்பட வைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கிரிப்பிபாஸ்தா எனப்படும் ஒரு இணையதள சிறுகதையில், சிலென்டர் மனிதரை பற்றி வாசித்தப் பிறகு, தோழியை கொலை செய்வதற்கு தூண்டப்பட்டதாக அந்த சிறுமிகள் கூறியிருக்கின்றனர்.
 
2009-ஆம் ஆண்டு, சிலென்டர் மனிதர் என்ற கற்பனை கதாபாத்திரம் முதல் முறையாக இணையவெளியில் தோன்றியது.
 
சம்திங் ஆவ்புல் இணையதள மன்றத்தில் இருந்து பதிவிட அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததற்காக, ஃபுளோரிடாவை சேர்ந்த எரிக் நுட்சென் என்பவர், தான் உருவாக்கிய இந்த கதாபாத்திரத்தை, ஒரு கூட்டத்தின் பின்னால் இருப்பதை போன்று படமாக பதிவேற்றியிருந்தார்.
 
வயது வந்தோராக பாவிக்க முடிவு:
 
இரண்டு சிறுமியரும் திட்டமிட்டு, வன்முறை தாக்குதலை நடத்தி இருப்பதால், இவர்களை வயது வந்தோராக பாவித்து நீதிமன்ற விசாரணை நடத்த கூறிய கீழ் நீதிமன்றத்தின் முடிவை விஸ்கான்சினிலுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மாதம் உறுதி செய்தது.
 

 
பதின்ம வயதினரான இருவரும் புத்தி சுவாதீனமின்றி துன்பப்படுவதாக கூறி, இளையோர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்த வேண்டுமென இந்த சிறுமியரின் வழக்கறிஞர்கள் வாதிட்டு இருக்கின்றனர்.
 
தோழியை தாக்கியபோது, மோர்கன் கெசர் (இடது) மற்றும் அனிஸ்சா வெய்வர் (வலது) இருவருக்கும் வயது 12
 
காவல்துறை புலனாய்வு:
 
தாக்குதலுக்கு பின்னர், சந்தேகத்திற்குரிய இருவரும் உள்ளூர் நெடுஞ்சாலை ஒன்றில் நடந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முதுகுப்பையில் ஒரு கத்தி கண்டுபிடிக்கப்பட்டது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
 
பிறந்தநாளை கொண்டாடிய மோர்கன் கெய்சரின் வீட்டில் வைத்து இரவு தூங்கும்போது, அவர்களின் தோழியை கத்தியால் குத்தி தாக்குவதற்கு இந்த சிறுமியர் முன்னர் திட்டமிட்டிருந்தனர்.
 
ஆனால், அதற்கு மாறாக, அடுத்த நாள் காலை, அருகில் இருக்கும் பூங்கா ஒன்றில் வைத்து இந்த குற்றத்தை செய்ய அவர்கள் தீர்மானித்தனர்.
 
இந்தத் தாக்குதலை நடத்திய பிறகு, விஸ்கான்சின் நிக்கோலெட் தேசிய பூங்காவில் அமைந்திருப்பதாக அவர்கள் நம்பி இருந்த சிலென்டர் மனிதரின் மாளிகைக்கு நடந்து செல்ல திட்டமிட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
 
தாக்கப்பட்டவர் குணமடைந்தார்:
 
இந்த இரு சிறுமியராலும் தாக்கப்பட்டவர் நலமடைந்து பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.