வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வியாழன், 16 அக்டோபர் 2014 (17:58 IST)

'விடுதலைப் புலிகள்' பயங்கரவாத அமைப்பு என்ற ஐரோப்பிய யூனியன் முடிவு ரத்து

விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படுவதில் கையாளப்பட்டிருந்த நடைமுறையில் தவறுகள் இருக்கின்ற காரணத்தால், இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று இந்தியாவில் அறிவிக்கப்பட்டிருந்த முடிவின் அடிப்படையில் ஐரோப்பிய கவுன்சில் முடிவெடுத்திருந்ததாகவும், அது முறையல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
 
எனவே ஒரு மூன்று மாத காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருப்பது பற்றி ஐரோப்பிய கவுன்சில் மறுபடியும் பரிசீலித்து புதிதாக முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
 
இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீடிக்கவே செய்யும் என்றும், அது நீக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றத்தின் ஊடகத்துறை அதிகாரியான கிறிஸ்டஃபர் ஃப்ரெட்வெல் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பா என்ற கேள்வியை ஹேக்கில் இருக்கின்ற நீதிமன்றம் பரிசீலித்திருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
 
மேலும் விடுதலைப் புலிகள் அமைப்பு உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்புதானே தவிர சர்வதேச சட்டங்களின் மூலம் அதனை பயங்கரவாத அமைப்பாக வரையறுக்க முடியாது என அந்த அமைப்பின் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்திருந்தது என கிறிஸ்டஃபர் குறிப்பிட்டார்.