வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 14 மே 2014 (17:12 IST)

நாடாளுமன்றத் தேர்வுக் குழு : டக்ளஸ் அழைப்பு, ததேகூ நிராகரிப்பு

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் விடுத்திருக்கும் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்துள்ளனர்.

பல தசாப்தங்களாக நீடித்திருக்கும் இனப்பிரச்சினையை ஒரு காலக்கெடுவுக்குள் தீர்ப்பதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவாலேயே முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
 
இப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசுக்கும், கூட்டமைப்புக்கும் இடையே ஒரு அனுசரணையாளராக பேச்சுவார்த்தைகளை தொடங்க தென் ஆப்ரிக்கா உதவ முன்வந்துள்ள நிலையில், அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையே அமைச்சரின் முன்னெடுப்பு என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.
 
இலங்கையில் தமிழர்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் எனக் கூறும் டக்ளஸ் தேவானந்தா, நல்ல பல சந்தர்பங்கள் கூட்டமைப்பின் நிலைப்பாட்டாலேயே வெற்றிபெறவில்லை என்றும், அதுபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படக் கூடாது எனவும் கூறுகிறார்.
 
நாட்டின் வடக்கே இராணுவத்தின் பிரசன்னம், ஆட்கள் கைது செய்யப்படுவது போன்ற பிரச்சினைகளையே தீர்க்க முடியாத அமைச்சரால் இனப் பிரச்சினைக்கான தீர்வில் என்ன பங்காற்ற முடியும் எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்புகிறார்.
 
இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தடைபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.
 
நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் மூலமாக ஒரு தீர்வு எட்டப்படாவிட்டால் அரசில் தொடருவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியத் தேவை ஏற்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளதையும் கூட்டமைப்பினர் விமர்சித்துள்ளனர்.