வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (14:52 IST)

தமிழகம், மகாராஷ்டிராவில் விரைவில் கொரோனா உச்சத்தை அடையும் - வல்லுநர்கள் கணிப்பு

இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் 31 சதவிகித நோயாளிகளைக் கொண்டிருக்கும் மகாராஷ்டிராவிலும், தமிழகத்திலும் விரைவில் கொரோனா உச்சடையும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

 
இந்தியாவில் கொரோனா நோயாளிகளில் மகாராஷ்டிராவில் 23 சதவிகிதமும், தமிழகத்தில் 8 சதவிகித கொரோனா நோயாளிகளும் இருக்கிறார்கள், இந்த மாநிலங்களில் விரைவில் கொரோனா உச்சம் அடைந்து, விரைவில் அங்கு கொரோனாவில் இருந்து விடுபடும் காலம் தொடங்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதும், நாள்தோறும் குணமடைவோரின் எண்ணிக்கையால் உச்சமடைவது தடுக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் ஜூலை மாதம் இறுதி வாரத்தில் கொரோனா தொற்று உச்சத்தைத் தொட்டது. பிறகு அது மெல்ல குறைந்து வருவதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தொற்றுநோய் துறை பேராசிரியர் டாக்டர் பிரபாகரன் துரைராஜ் கூறுகையில், டெல்லியைப் போலவே மகாராஷ்டிராவும், தமிழகமும் கொரோனா உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
 
டெல்லியிலுள்ள கொரோனா பரிசோதனை மையத்தின் தலைவர் அல்பனா ரஸாதான் கூறுகையில், ஜூலை கடைசி வாரத்தில் டெல்லியில் கொரோனா உச்சத்தை அடைந்தது. பிறகு பாதிப்பு மெல்ல குறைந்தது. அதுபோலவே மகாராஷ்டிராவிலும், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு பிறகு திரும்ப கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்துவிடும் என்கிறார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.