வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (16:36 IST)

சார்லி சாப்ளின் - சுவாரஸ்ய தகவல்கள்!

ஹாலிவுட் திரையுலகில் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டு சாதனை படைத்தவர் பிரிட்டிஷ் நடிகர் சார்லி சாப்ளின். 
கிழிந்த கோட்டு, தலைக்கு பொருந்தாததால் கையில் வைத்திருக்கும் தொப்பி, வித்தியாசமான நடை, வலிகளை மறைக்கும் புன்னகை என்று தனக்கான  அடையாளத்தை சுயமாக உருவாக்கிக் கொண்டு திரைப்பட உலகில் வலம் வந்தார் சாப்ளின். அவரது 129-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படும் இந்த நாளில்  சார்லிஸ் ஸ்பென்சர் சாப்ளின் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இவை.
 
1889 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார் சார்லி சாப்ளின். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக லண்டனில் உள்ள லேம்பெத் வொர்க் ஹவுஸில் வசித்த பிறகு  1910-இல் அமெரிக்காவுக்கு புறப்பட்டார்.
 
சிறு வயதில் வறுமையின் பிடியில் இவரது குடும்பம் சிக்கியிருந்தபோது, பூங்காக்களில் உறங்கி பல இரவுகளைக் கழித்தவர் சார்லி சாப்ளின். 1925, ஜூலை  மாதம், டைம்ஸ் வார இதழின் அட்டை படத்தை அலங்கரித்த முதலாவது திரைப்பட உலகைச் சேர்ந்த நாயகன் இவர்.
 
தனது வாழ்நாளில் நான்கு பெண்களை வெவ்வேறு காலகட்டங்களில் திருமணம் செய்தார். அவரது மனைவிகள் அனைவருமே அவரை விட மிகவும்  இளையவர்கள். முதலாவது மனைவிக்கு 16 வயதானபோது அவருக்கு வயது 29. இரண்டாவது மனைவிக்கு 16 ஆன போது இவருக்கு வயது 35. மூன்றாவது  மனைவிக்கு 28 வயதானபோது இவருக்கு 47 வயதானது. கடைசியாக நான்காவது முறையாக ஊனா ஓ நீல் என்ற 18 வயது பெண்ணை திருமணம் செய்தபோது  அவருக்கு வயது 54.
 
சார்லி சாப்ளின் மறைவுக்குப் பிறகு, அவரது மிகப்பெரிய ரகிகையான யுக்ரெய்ன் நாட்டு விண்வெளி வீராங்கனை லியூட்மீலா கரச்கினா, ஒரு எரிகல்லுக்கு 3623  சாப்ளின் என்று பெயர் சூட்டினார். வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி சிறந்த கதையாசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர் ஆகிய பணிகளையும் இடைவிடாமல் செய்து வந்தார் சாப்ளின்.
 
ஹாலிவுட்டுக்கு செல்லும் முன்பு ஜெனீவா, ஸ்விட்சர்லாந்தில் வசித்தார். அங்கு அவரது நினைவாக ஒரு அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது.    ஸ்காட்லாந்தில் உள்ள நார்ன் என்ற இடத்தை மிகவும் விரும்பியதால் அங்கு ஆண்டுதோறும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சாப்ளின்.
1977, டிசம்பர் 25இல் சாப்ளின் உயிரிழந்த பின்பு, அடுத்த மூன்று மாதங்களில் அவரது சடலத்தை ஒரு கும்பல் பணம் பறிக்கும் நோக்கத்துடன் திருடியது. பிறகு பதினோரு வாரங்கள் கழித்து அந்த கும்பல் பிடிபட்டது. விலைமதிப்பற்ற அமைதி, நார்ன் என்ற இடத்தில் மட்டுமே கிடைப்பதாக தனது நெருங்கிய நண்பர்களிடம்  கூறினார். சாப்ளின் யார் என்றே தெரியாதவர்கள் வாழ்ந்த அந்த இடத்தில் கூட அவருக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி அவர்களுடன் மகிழ்ச்சியாக  இருந்தார் சாப்ளின்.