வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (19:08 IST)

சன் தொலைக்காட்சியின் கேபிள் தொழிலுக்கு அனுமதி மறுப்பு

சன் தொலைக்காட்சிக் குழுமத்தின் கேபிள் தொலைக்காட்சி சேவையைத் தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் வழங்குவதற்குத் தேவையான உரிமம் மறுக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 
சன் குழுமம், சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் கேபிள் தொலைக்காட்சி சேவைகளைக் கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. தற்போது இந்த ஆண்டுக்கான உரிமம் வழங்க, இந்திய உள்துறை அமைச்சகம் அதற்கு அனுமதி மறுத்துள்ளது. இதற்கான தகவலைக் கடந்த 20ஆம் தேதி வெளியிட்டபோது, அன்றிலிருந்து 15 நாட்களுக்குள் தன் சேவைகளை நிறுத்திக் கொள்ளும்படி சன் குழுமத்துக்கு இந்திய அரசின் உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
 
இதனைத் தொடர்ந்து கல் கேபிள்ஸ் பிரைவேட் லிமிடேட் (Kal cables Pvt. Ltd.) என்கிற சன் குழுமத்தின் அங்கமாக உள்ள இந்த நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நகரங்களுக்குமான மனுக்கள் இன்று தனித் தனியே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், இந்திய உள்துறை அமைச்சகம், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இந்த விவகாரம் தொடர்பாக எந்த விதமான விளக்கமும் கோராமல் எதனால் உரிமம் வழங்குவதற்கு அனுமதி மறுத்துள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
 
அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடத் தடை கோரியும் அந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று, இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியம் முன்பாக நடைபெற்றது. அப்போது, சன் குழுமம் தரப்பு வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதி, மத்திய உள்துறை அமைச்சகம் சன் குழுமத்துக்கான உரிமத்தை மறுக்கும் உத்தரவை வெளியிடுவதற்கு முன்னர் சன் குழும நிறுவனத்திடம் இருந்து ஏன் விளக்கங்கள் கோரவில்லை என்று கேள்வி எழுப்பியதோடு, இந்த வழக்கின் விசாரணையை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.
 
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்கி வரும் சன் குழுமம், கடந்த 2011ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் பகுதியில் தாங்கள் பெற்றுள்ள உரிமம் காலாவதியாவதற்கு முன்பாகத் தமிழக அரசு கேபிள் நிறுவனம் சட்ட விரோதமாக இவர்கள் அமைத்திருந்த கம்பிகளை அகற்றி ஒளிபரப்புச் சேவைக்கு இடைஞ்சல் விளைவிப்பதாக வழக்கு தொடுத்திருந்தததும் குறிப்பிடத்தக்கது.