வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 8 மார்ச் 2020 (16:24 IST)

பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: வெற்றியாளர் இன்று அறிவிப்பு

பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: வெற்றியாளர் இன்று அறிவிப்பு
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த பிபிசியின் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை பெறப்போவது யார் என்ற கேள்விக்கான பதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிடைத்துவிடும்.
 
ஓர் ஆண்டுக்கான சிறந்த இந்திய வீராங்கனை விருது வழங்கும் விழாவை இந்தியாவில் முதல்முறையாக நடத்துகிறது பிபிசி.
 
தூத்தி சந்த், மானசி ஜோஷி, மேரி கோம், பி.வி. சிந்து, வினேஷ் போகாட் ஆகியோரே இந்த விருதுக்குரிய இறுதிச் சுற்று போட்டியாளர்கள்.
 
இந்நிலையில், இன்று மாலை, புது டெல்லியிலுள்ள தாஜ் பேலஸ் விடுதியில் நடைபெறும் விழாவில் வெற்றியாளர் அறிவிக்கப்படுகிறார்.
 
மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான கிரண் ரிஜிஜூ இந்த விழாவின் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். மேலும், இந்த விழாவில் பிபிசியின் தலைமை இயக்குநர் (டைரக்டர் ஜெனரல்) டோனி ஹால், விளையாட்டு மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
 
விருது வழங்கும் விழா குறித்த தகவல்களை உடனுக்குடன் கட்டுரை வடிவில் பிபிசியின் அனைத்து இந்திய மொழிச் சேவைகளின் இணையதளங்களின் வாயிலாகவும் தெரிந்துகொள்ள முடியும்.
 
இந்த விழாவின் மற்றொரு பகுதியாக, இந்திய விளையாட்டு துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களித்த தலைசிறந்த வீராங்கனை ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படவுள்ளது.
 
வெற்றியாளர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?
 
பிபிசி உருவாக்கிய நாட்டின் தலைசிறந்த விளையாட்டு செய்தியாளர்கள், நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்களை கொண்ட குழு இந்த விருதுக்கு தேர்வு செய்வதற்கான ஐந்து வீராங்கனைகள் கொண்ட பட்டியலை தயாரித்தது. தேர்வு குழுவினரால் அதிகம் பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு வீராங்கனைகள், பொதுமக்கள் வாக்களிப்புக்காக முன்மொழியப்பட்டனர்.
 
தலைசிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கு விருது வழங்கி கௌரவிக்கும் பிபிசி
பிபிசி வழங்கும் இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது: நடுவர்கள் யார் யார்?
 
இதையடுத்து கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரைபிபிசியின் பல்வேறு மொழிச் சேவைகளின் இணையதளங்களின் வாயிலாக தங்களுக்கு விருப்பமான வீராங்கனைக்கு பொது மக்கள் வாக்களித்தனர்.
 
அந்த ஐந்து வீராங்கனைகள் யார் யார்?
1.தூத்தி சந்த்
 
வயது 23, விளையாட்டு: தடகளம்
 
பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தற்போது இந்திய தேசிய சாம்பியனாக திகழ்கிறார் தூத்தி சந்த். 2016 கோடைகால ஒலிம்பிக்கில் பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு தகுதி பெற்ற மூன்றாவது இந்திய வீராங்கனை இவர். 2018ல் நடைபெற்ற ஜகார்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தூத்தி சந்த் வெள்ளிப்பதக்கம் வென்றார். 1998 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியா இதில் வென்ற முதல் பதக்கம் இது. பல சர்ச்சைகளை கடந்து வந்த இவர், இந்தியாவின் சிறந்த தடகள வீராங்கனையாக விளங்குகிறார்.
 
2. மானசி ஜோஷி
 
வயது: 30, விளையாட்டு: பாரா-பேட்மிண்டன்
 
2019ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற பாரா-பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றவர் மானசி ஜோஷி. உலகின் தலைசிறந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனை பட்டியலில் இவர் முன்னணியில் உள்ளார். ஜகார்தாவில் 2018ல் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை தன்வசமாக்கிக் கொண்டார்.
 
2011ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் தனது இடது காலை இழந்தார் மானசி ஜோஷி. ஆனால், உலகின் தலைசிறந்த பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ வேண்டும் என்ற அவரது விருப்பத்தை அது தடுக்கவில்லை.
 
3. மேரி கோம்
 
வயது: 36, விளையாட்டு: குத்துச்சண்டை (ப்ளைவெயிட் பிரிவு)
 
பிரபலமாக மேரி கோம் என்று அழைக்கப்படும் மாங்க்டே சங்கினிசாங், இதுவரை எட்டு உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்ற ஒரே குத்துச்சண்டை வீரராவார் (ஆண்கள் அல்லது பெண்கள்). உலக தொழில்சாரா குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை 6 முறைகள் வென்றுள்ளார் மேரி கோம். ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனையாக மேரி கோம் திகழ்கிறார்.
 
மாநிலங்களவை உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்ட மேரி கோம், அவரது பெயருக்கு முன்னால் 'OLY' என்ற அடையாளத்தை வழங்கி உலக ஒலிம்பியன்ஸ் அமைப்பு அவரை அங்கீகரித்துள்ளது.
 
4. பி.வி. சிந்து
 
வயது 24, விளையாட்டு: பேட்மிண்டன்
 
கடந்த ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் விளையாட்டு வீராங்கனையானார் பி.வி சிந்து. உலக சாம்பின்யன்ஷிப் போட்டிகளில் மொத்தம் 5 பதக்கங்களை அவர் வென்றுள்ளார். மேலும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் பிவி சிந்து.
 
உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் முதல் 20 வீரர்களின் பட்டியலில் சிந்து செப்டம்பர் 2012ஆம் ஆண்டே இடம்பெற்றார். அப்போது அவருக்கு 17 வயதுதான். கடந்த நான்கு ஆண்டுகளாக முதல் 10 இடங்களில் தொடர்ந்து நீடித்து வருகிறார். வரவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பிவி சிந்து வெல்வார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் இந்திய பேட்மிண்டன் ரசிகர்கள்.
 
5. வினேஷ் போகாட்
 
வயது: 25, விளையாட்டு: மல்யுத்தம் (ஃப்ரீஸ்டைல் பிரிவு)
 
2018ஆம் ஆண்டு ஜகார்தா ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்களை வினேஷ். காமன்வெல்த் போட்டிகளிலும் இரண்டு தங்கப்பதக்கங்களை இவர் வென்றுள்ளார். 2019ல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக வென்ற வினேஷ், வெண்கலப்பதக்கம் பெற்றார்.