வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2015 (20:20 IST)

பேருந்தில் கைது செய்யப்பட்டு காட்டில் கொல்லப்பட்டனர்: பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

ஆந்திர மாநிலம், திருப்பதியை அடுத்து உள்ள வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஏழுபேர் ஆந்திர மாநில எல்லையில் கைதுசெய்யப்பட்டு, பிறகு சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
 

 
செவ்வாய்க் கிழமையன்று சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்கள் திருப்பதியில் உள்ள ரூயா அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமையன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன.
 
கொல்லப்பட்டவர்களின் உறவினர்களைக் கண்டறியும் பணியில் ஆந்திர மாநில காவல்துறையினருடன் இணைந்து தமிழக காவல்துறையினரும் ஈடுபட்டிருந்தனர்.
 
இந்த நிலையில், இன்று மதியம் இரண்டு மணியளவில் கொல்லப்பட்டவர்களில் 7 பேரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
 
இவர்கள் ஏழு பேரும் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் உள்ள அர்ஜுனாபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 
திங்கட்கிழமைன்று பிற்பகலில் திருவண்ணாமலையிலிருந்து 8 பேர் ஆந்திர மாநிலத்தில் கூலி வேலை செய்வதற்காக பேருந்தில் புறப்பட்டதாகவும் ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி என்ற இடத்தில் ஆந்திர காவல்துறையினர் அவர்களை பேருந்திலிருந்து இறக்கி கைதுசெய்ததாகவும் அர்ஜுனாபுரத்தைச் சேர்ந்த ராஜபாஹு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
இந்த எட்டுப் பேரில் ஒருவர் மிக முதியவராக இருந்ததால், அவர் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாகவும் அவர், ஊருக்குத் திரும்பிவந்து இவர்கள் கைதுசெய்யப்பட்ட தகவலை ஊராரிடம் தெரிவித்ததாகவும் ராஜபாஹு கூறினார்.
 
அதன் பிறகு மீதமிருந்த ஏழு பேரும் வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
இவர்கள் மரம் கடத்தும் வேலைக்காக வரவில்லையென்றும் கட்டட வேலைக்காகவே ஆந்திர மாநிலத்திற்கு வந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.
 
இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், உரிய இழப்பீட்டை ஆந்திர அரசு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.