வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: சனி, 4 அக்டோபர் 2014 (15:13 IST)

எய்ட்ஸின் தோற்றம் 1920களின் கின்ஷாஸா என்கிறது புதிய ஆராய்ச்சி

எய்ட்ஸ் நோயின் தோற்றம் பற்றி ஆராய்ச்சிகளை நடத்திய மேற்குலக விஞ்ஞானிகள் 1920களில் கொங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் கின்ஷாஸா நகரில் இருந்துதான் ஹெச்.ஐ.வி கிருமி பரவ ஆரம்பித்தது என்று கூறுகின்றனர்.


 
ஹெச்.ஐ.வி கிருமி பற்றிய ஒரு தொல்லியல் ஆராய்ச்சி என்று வர்ணிக்கப்படும் இந்த ஆய்வின் முடிவுகள் சயின்ஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன.
 
ஜனத்தொகை பெருக்கம், மக்களின் பாலுறவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிதாக புழக்கத்துக்கு வந்த ரயில் போக்குவரத்து எல்லாமும் சேர்ந்த ஒரு கலவையால்தான் 1920களில் கின்ஷாஸாவில் இருந்து இந்நோய் மற்ற மற்ற இடங்களுக்குப் பரவியதாக இங்கிலாந்தின் ஆஸ்ஃபர்ட் பல்கலைக்கழகமும் பெல்ஜியத்தின் லியுவென் பல்கலைக்கழகமும் சேர்ந்து நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
பல்வேறு காலகட்டத்திலும் சேமித்துவைக்கப்பட்ட ஹெச்.ஐ.வி. கிருமியின் மரபணுத் தொகுதிகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து எது முந்தைய தலைமுறை என்று கண்டுபிடித்துக்கொண்டேபோக அதன் ஆரம்பத் தோற்றம் ஆய்வாளர்களை 1920களின் கின்ஷாஸாவுக்கு இட்டுச் சென்றுள்ளது.
 
அந்நேரம் அந்தப் பகுதியில் நடந்த மிகப் பெரிய ஜனத்தொகை பெருக்கம், தடையின்றி பெருமளவில் நடந்த பாலியல் தொழில், விழிப்புணர்வு இல்லாமல் கிருமிநாசம் செய்யப்படாத ஊசிகள் பயன்படுத்தப்பட்டது போன்ற காரணங்களால் அவ்விடத்திலிருந்து மற்ற மற்ற இடங்களுக்கு ஹெச்.ஐ.வி. பரவியிருந்துள்ளது.
 
தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசாக இருக்கும் நாடு, அந்த நேரத்தில் பெல்ஜியத்தால் ஆளப்பட்ட காங்கோவாக இருந்தது. கின்ஷாஸா நகரம் 1966க்கு முன்பாக லியோபோல்ட்வீல் என்று அழைக்கப்பட்டது.
 
அந்த நேரத்தில் இரண்டு ஆணுக்கு ஒரு பெண் என்ற அளவில் பெண்களின் எண்ணிக்கை அவ்விடத்தில் குறைவாக இருந்ததால், பாலியல் தொழில் மும்முரமாக நடந்தது.
 
தவிர அந்த நேரத்தில்தான் அங்கு புதிதாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு தூரத்து இடங்களிலிருந்து மக்கள் வந்துபோக ஆரம்பித்திருந்ததனர் என ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆலிவர் பைபஸ் தெரிவித்தார்.
 
ஹெச்.ஐ.வி. உலகின் கவனத்தை ஈர்த்ததென்பது என்னவோ 1980களில்தான், இதுநாள்வரை இக்கிருமித் தொற்று உலகில் ஏழரை கோடி பேருக்கு வந்துள்ளது.
 
ஆனால் ஆப்பிரிக்க கண்டத்தில் இந்த நோய்க்கு இதனினும் நீண்ட சரித்திரம் உள்ளது. ஆனால் குறிப்பாக எந்த இடத்திலிருந்து இந்த நோய் பரவ ஆரம்பித்தது என்பது சம்பந்தமாக கணிசமான வாதப் பிரதிவாதங்கள் இருந்து வருகின்றன.
 
குரங்குகளிடத்தில் இருந்துதான் இந்தக் கிருமி மனிதர்களுக்குப் பரவியிருந்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அவ்வாறு தாவியிருந்தது.
முதலில் ஒருமுறை அப்படி குரங்குகளிடத்தில் இருந்து மனிதனுக்குத் தாவிய ஹெச்.ஐ.வி கிருமியின் ஒரு குறிப்பிட்ட ரகம் கெமரூன் நாட்டில் பல்லாயிரக்கணக்கானோரை பாதித்திருந்தது. ஆனால் அது உலகம் முழுக்க பரவவில்லை. ஆனால் உலகெங்கிலுமாக கோடிக்கணக்கானோருக்கு பரவியது ஹெச்.ஐ.வி. 1 சப்குரூப் எம் என்ற ரகம்தான்.
 
பரவுவதற்கு ஏற்ற சமூக சூழல் வரும்போது கிருமியின் குறிப்பிட்ட ஒரு ரகம் உலக நோயாக உருவெடுத்துக்கும் என்ற படிப்பினையாக அமைந்துள்ள இந்த ஆய்வு, தற்போது மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிவரும் இபோலா போன்ற கிருமிகள் உலக நோயாகப் பரவுவதை தடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது.