வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 3 மார்ச் 2019 (11:41 IST)

'அபிநந்தன் பாகிஸ்தானில் மன உளைச்சலுக்கு ஆளானார்'

பாகிஸ்தானின் பிடியில் இருந்தபோது தான் மனரீதியான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் கூறினார் என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் இந்தியாவிடம் விங் கமாண்டர் அபிநந்தனை ஒப்படைத்த பின்னர் முதல் முறையாக இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று டெல்லியிலுள்ள மருத்துவமனையில் சந்தித்தார்.
 
அப்போது, பாகிஸ்தானில் தனக்கு நேர்ந்தது குறித்து நிர்மலா சீதாராமனிடம் பேசிய அபிநந்தன், பாகிஸ்தான் தரப்பில் தனக்கு உடல் ரீதியாக எவ்வித தொல்லையும் கொடுக்கப்படவில்லை என்றும், ஆனால் மனரீதியான உளைச்சலுக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்ததாக அரசு வட்டாரங்கள் வழியாக தங்களுக்கு தெரியவந்துள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
 
பாகிஸ்தானில் அபிநந்தன் மன உளைச்சலுக்கு ஆளான போதிலும், அவர் தெளிவுடனும், உற்சாகத்துடனும் இருப்பதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இந்த சந்திப்புக்கு பின்னர், ஏர் சீப் மார்ஷல் தநோயா உள்பட பல்வேறு விமானப்படை உயரதிகாரிகள் அபிநந்தனை தனியே சந்தித்து பேசினர்.
 
இந்திய விமானப் படை தலைவருடனான பிரத்யேக தனி சந்திப்பில், தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அபிநந்தன் அவரிடம் விளங்கியிருப்பார் என்று நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர் என்று ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
 
முன்னதாக, நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் தரப்பால், வாகா - அட்டாரி எல்லையில் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.
 
இந்தியா அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்ட உடனேயே அபிநந்தனுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட அபிநந்தன், முப்படைகளின் விமான ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ மையமான 'ஏர் போர்ஸ் சென்ட்ரல் மெடிக்கல் எஸ்டாபிளிஷ்மென்ட்க்கு' அழைத்து செல்லப்பட்டார்.
 
பின்னர் அருகிலுள்ள 'ஆர்மி ஹாஸ்பிடல் ரிசர்ச் அண்ட் ரெபரல்' என்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த இடத்தில்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் விமானப்படை அதிகாரிகள் அபிநந்தனை சந்தித்து வருகின்றனர்.
 
இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படும்போது அவரை வரவேற்க ஏராளமான இந்தியர்கள், இந்தியக் கொடி, இசைக் கருவிகள் உள்ளிட்டவற்றுடன் அட்டாரி பகுதியில் கூடியிருந்தனர்.
 
இந்திய விமானப்படையை சேர்ந்த விங் கமேண்டர் அபிநந்தனை பாகிஸ்தானில் உள்ள இலக்குகள் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு பின்னர் காணவில்லை என்று புதன்கிழமையன்று இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
 
அமைதி நோக்கத்துடன் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று வியாழனன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.
 
பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார்.