1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. க‌ட்டுரைக‌ள்
Written By Webdunia

புதன் தசை நடக்கும் போது ஏற்படும் நன்மைகள் என்ன?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

ஜோதிடத்தில் புதனை வித்தைக்காரகன் என்று கூறுவர். எல்லா வகையிலும் சிறப்பான பலன்களைத் தரக்கூடிய கிரகம் புதன். ஒருவரின் ஜாதகத்தில் புதன் சிறப்பாக, வலுவாக இருந்தால் அவர்களுக்கு புதன் தசை நடக்கும் போது உலகமே போற்றக் கூடிய வளர்ச்சி கிடைக்கும். உலகப் புகழ்பெற்ற பல விஞ்ஞானிகள் புதனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாகவே இருந்துள்ளனர்.

ஜாதகத்தில் புதன் நன்றாக அமையப் பெற்ற ஜாதகர், எந்தத் துறையில் இருந்தாலும், புதன் தசை நடக்கும் போது அந்தத் துறையில் பல அதிசயிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி, முன்னேற்றம் அடைவார்.

அவர் ஆசிரியராக இருந்தால் பயிற்றுவிக்கும் விதத்தில் உள்ள தனித்தன்மை காரணமாக மாணவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெறுவார். கணினித் துறையில் கடைநிலை ஊழியராக இருந்தாலும், புதன் தசை நடக்கும் போது அவரால் டீம் லீடர், புராஜக்ட் தலைவராக உயர முடியும்.

மூளையின் செயல்திறனை புதன் தசை விரைவுபடுத்தும். மற்றவர்கள் கால்குலேட்டர் உதவியுடன் போடும் கணக்குகளைக் கூட, புதன் ஆதிக்கம் பெற்றவர்கள் மனதிலேயே போட்டு விடை கூறுவர்.

ஒருவர் ஜாதகத்தில் புதன் நன்றாக அமைந்து, புதன் தசை நடந்தால் அவருக்கு சோர்வு என்பதே தெரியாது. குறைந்தளவு உணவு உட்கொண்டாலும் சோர்வின்றி உற்சாகமாக பணியாற்றுவர். கூட்டு முயற்சிகளை ஆதரிக்கும் மனப்பான்மை அப்போது ஏற்படும்.

மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களும் புதன் தசை நடக்கும் சமயத்தில் அபார வளர்ச்சி காண்பர். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் அந்த நிறுவனத்தில் சேருவதற்கு முன்பே அவருக்கு சனி தசை நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் மிகவும் பழமையான சிந்தனைகளைக் கொண்டிருந்தார்.

காலையில் பாதி ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு விட்டு, இரவு மீதிப் பழத்தை சாப்பிடும் அளவுக்கு அவரது மனநிலை இருந்தது. சனி வலுவாக இருந்ததே அதற்குக் காரணம் என அவரது ஜாதகத்தைப் பார்த்தும் புரிந்து கொண்டேன்.

அவர் பணியாற்றும் நிறுவனம் அவரை நீக்கப் போவதாக தகவல் கிடைத்ததும், என்னிடம் ஆலோசனை கேட்க வந்திருந்தார். அவரது ஜாதகத்தில் புதன் சிறப்பாக இருந்ததால், புதன் தசை வரும் போது நீங்கள் முற்றிலுமாக மாறி விடுவீர்கள், பணியிலும் முன்னேற்றம் பெறுவீர்கள் என்று கூறினேன்.

அதற்கு அவர், “இப்போதே 49 வயதாகி விட்டது. இனிமேல் நான் மாறப் போவது சாத்தியம” என்று கேள்வி எழுப்பிவிட்டுச் சென்றார்.

ஆனால், புதன் தசை துவங்கியதும் அவரது ஆடைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. உடலுக்கு தகுந்த உடைகளை அணியத் துவங்கினார். எப்போதும் கையை வீசிச் சென்ற அவர், புதன் தசை காலத்தில் புத்தகம், டைரி சுமந்து சென்றார். பேச்சில் இருந்த பழமைவாதம் மாறியது. கல்லூரி விரிவுரையாளர் போல் காணப்பட்டார்.

சனிதசை நடக்கும் காலத்தில் அவரை மதிக்காத சக ஊழியர்கள், புதன் தசை துவங்கியவுடன் அவரிடம் ஏற்பட்ட மாற்றதால் அவரை மதிக்கத் துவங்கினர். மேலதிகாரிகள் மத்தியிலும் அவருக்கு செல்வாக்கு உண்டானது.

பற்பசை விளம்பரத்திற்காக அவர் கூறிய யோசனை ‘கிளிக’ ஆகியது. இதனால் அவருக்கு தொடர்ந்து பதவி உயர்வுகள் கிடைத்தன. தற்போது அவர், தனது மனநிலைக்கு, யோசனைக்கு ஒத்துவரக் கூடிய 4 பணியாளர்களுடன் அதே நிறுவனத்தில் டீம் லீடராக பணியாற்றி வருகிறார்.

எனவே, ஜாதகத்தில் புதன் நன்றாகப் அமையப் பெற்றவர்களுக்கு, புதன் தசை நடக்கும் காலத்தில் சம்பந்தப்பட்ட துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி வளர்ச்சி பெறுவர்.