வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala

கார்த்திகை மாத சோமவார விரதம் கடைபிடிப்பது ஏன் தெரியுமா?

கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விழா கடைப்பிடிக்கப்படும். ‘சோமன்’ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும். அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு.


 
 
சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது.
 
கார்த்திகை மாத முதல் சோம வாரத்தில் இருந்து சோம வார விரதத்தை தொடங்குதல் வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்கலாம்.
 
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றுதான் சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. 
 
சோமவாரம் என்பது வார நாட்களில் திங்கட்கிழமையைக் குறிப்பது. சந்திரன் கடைபிடித்து மேன்மை பெற்ற விரதம் ஆதலால் கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் இவ்விரதத்தை கடைபிடிப்பார்கள்.
 
சோம வார விரத மகிமைகள்:
 
தட்சாதிபதியின் புதல்வியர்களான 27 நட்சத்திரப் பெண்களையும் மணந்து கொண்ட சோமன் என்னும் சந்திரன். அவர்களுள் - ரோகினியை மட்டுமே மிகப்பற்றுதல் கொண்டிருந்தான். இதுகண்டு மற்றவர்கள் தங்கள் தந்தையிடம் முறையிட்டார்கள். 
 
தட்சாதிபதியும் சந்திரனை அழைத்து புத்திமதிகள் கூறினார். ஆனால் சந்திரன் அவரது அறிவுரைகளை ஏற்காததால் அவர் சந்திரனை கடுமையாக சபித்துவிட்டார். இதனால் பெரும் வருத்த முற்ற சந்திரன் முனிவர்களின் ஆலோசனைப்படி சிவபெருமானைக் குறித்து சோமவார விரதத்தை கடைப்பிடித்துத்தான் சிவனுக்கு மிகவும் பிரியமுள்ளவன் ஆனான். கார்த்திகை மாத சோம வாரத்தில்தான், சந்திரனை காக்கும்பொருட்டு சிவன் தன் தலை முடியில் அமர்த்தி கொண்டார். அப்படியமர்ந்து கொண்ட சந்திரன் சிவபெருமானிடம் ஒரு வேண்டுதலை வைத்தான்.
 
‘இறைவா! சோம வாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருப்பவர்களுக்கு நற்கதியைக் கொடுக்க வேண்டும்’ என்று வரம் கேட்டான். அவ்வாறு வரம் அளித்து அருளினார் ஈசன். இந்த சோமவார விரத்தத்தின் பலனால் சந்திரன் பிறைமுடியாய் ஈசனின் தலையில் அமரும் பாக்கியம் பெற்றான் என புராணங்கள் போற்றுகின்றன.
 
இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அவ்வாறு இருக்க முடியாதவர்கள் இரவில் பால், பழம் மட்டும் உண்ணலாம். அதுவும் செய்ய இயலாதவர்கள் மதியத்திற்கு பின்பு உணவருந்தலாம். அல்லது இரவில் சாப்பிடலாம். ஆனால் அந்த நாளில் ஒரு வேளையேனும் உணவருந்தாமல் இருப்பது நன்மை பயக்கும். 
 
இவ்வாறு விரதத்தை மேற்கொண்டு வந்தால், ஒருவர் தன் வாழ்வில் செய்த பாவங்கள் அகலும், நோய் நொடிகள் அண்டாது என்று கூறப்படுகிறது. இந்த விரதத்தை பக்தர்கள் தங்களின் வசதிக்கேற்ப, வாழ்நாள் முழுவதுமாகவே அல்லது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கோ கடைப்பிடித்து நலம் பெறலாம்.