வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 27 ஆகஸ்ட் 2016 (14:34 IST)

சசிகலா புஷ்பாவை கைது செய்ய ஏன் இவ்வளவு அவசரம்? - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

சசிகலா புஷ்பா ஆஜராக வேண்டும் என்பதில் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் காட்டுகிறீர்கள்? அவரை கைது செய்வதற்கு ஏன் இவ்வளவு அவசரம்? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பு உள்ளனர்.
 

 
சசிகலா புஷ்பா எம்.பி.யை கைது செய்ய, தமிழக அரசு இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.அத்துடன், சசிகலா புஷ்பாவைக் கைது செய்வதற்கு, மேலும் 6 வாரங்களுக்கு தடைவிதித்தும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
 
சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீட்டில் வேலைபார்த்தபோது, சசிகலா புஷ்பா, அவரது மகன் பிரதீப் ஆகியோர் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அதற்கு சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் திலகன், தாயார் கவுரி ஆகியோர் உடந்தையாக இருந்தனர் என்றும் நெல்லை மாவட்டம் ஆனைக்குடியைச் சேர்ந்த பானுமதி, ஜான்ஸி ராணி ஆகிய இளம்பெண்கள் புகார் அளித்தனர்.
 
அதன்பேரில், சசிகலா புஷ்பா எம்.பி. உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேர் மீதும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
 
இதனிடையே தில்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி முக்தா குப்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஆகஸ்ட் 29ஆம் தேதி சசிகலா புஷ்பாவும் குடும்பத்தினரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
 
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்தும், முன்ஜாமீன் வழங்க கோரியும் சசிகலா புஷ்பா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
அதில் சசிகலா புஷ்பா, தன் மீது சுமத்தப்பட்டிருப்பது, பல ஆண்டுகளுக்கு முந்தைய குற்றச்சாட்டு எனவும், பழிவாங்கும் வகையில் தற்போது அதை மீண்டும் கிளப்பி உள்ளனர் என்று தெரிவித்தார்.
 
மேலும், தமிழகத்திற்கு சென்று நீதிமன்றத்தில் ஆஜராக அச்சமாக இருக்கிறது; எனவே, நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
 
இந்த மனுவை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, சசிகலா புஷ்பா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி மதுரை கிளையில் ஆஜராக வேண்டும் என்றும் அவரை கைது செய்வதற்கு 6 வார காலத்துக்கு தடை விதிப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
முன்னதாக விசாரணையின்போது, ’சசிகலா புஷ்பா ஆஜராக வேண்டும் என்பதில் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் காட்டுகிறீர்கள்? அவரை கைது செய்வதற்கு ஏன் இவ்வளவு அவசரம்? என்று தலைமை நீதிபதி தாக்கூர் கேள்வி எழுப்பினார். ஒரு பெண் எம்.பி.யான அவர் எங்கும் ஓடிவிட மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.