வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 9 மார்ச் 2017 (05:57 IST)

சசிகலா, ஓபிஎஸ், விஜயபாஸ்கர் ஆகியோர் ஜெயலலிதா குடும்பத்தினர்களா? விளாசும் தீபா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து மூன்று மாதங்கள் ஆகியபோதிலும் அவரது மறைவு குறித்த சர்ச்சைகளும் மர்மங்களும் இன்னும் விலகவில்லை. அவருக்கு கடைசி நேரத்தில் என்ன நடந்தது, அவரது மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன? என்பதை இன்னும் மறைத்து வருவதாக குற்றம் சாட்டபட்டுள்ளது. இந்நிலையில் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த கமிஷன் அமைக்கவேண்டும் என்று நேற்று ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.


 


இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதாவின் மரணம் குறித்த அரசு அறிக்கைகளில், ‘குடும்பத்தார்’ என கூறியிருப்பது யார் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து தீபா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதாவின் மரணம் குறித்தும் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான அறிக்கைகளால் சந்தேகங்களும் கேள்விகளும் அதிகரிக்கின்றன.  அவற்றிற்கு பதில் காண உடனடியாக நீதி விசாரணை தேவை. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து, தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை  மேலும் பல சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. சிகிச்சை பற்றி குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்ட்டு சம்மதம் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால் யார் அந்த குடும்பத்தார்? என்று அரசு விளக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு ரத்த சொந்தம் நானும் தீபக்கும்தான். என்னிடம் எந்த தகவலும்  தெரிவிக்கவில்லை. என்னை  உள்ளேயே விடாமல் தடுத்து விட்டனர். 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி  உயிர்காக்கும் உபகரணங்கள் நீக்கப்பட்டது ஏன்? யாரிடம் சம்மதம் பெறப்பட்டது? ஆவணங்களில் யார் கையெழுத்திட்டது? மருத்துவ நெறிமுறைகளின் அடிப்படையில், என்னிடமும், தீபக்கிடமும் ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும். என்னிடம் எந்த ஒப்புதலும் பெறப்படவில்லை. தீபக்கிடமிருந்து சம்மதம் பெறப்பட்டிருந்தால் அந்த ஆவணங்களை அரசு வெளியிட வேண்டும். அரசு அறிக்கையில், குடும்பத்தார் யார் என்று ஓரிடத்தில் கூட பெயர் குறிப்பிடப்படவில்லை மாறாக வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் பெயர்கள்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் ஜெயலலிதாவின் குடும்பத்தினரா? இவர்தான் ஆவணங்களில் கையெழுத்திட்டது என திட்டவட்டமாக கூறாததற்கு காரணம் என்ன?அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கையில், ‘‘ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்றால், முதலில் விசாரிக்கப்படுபவர் ஓ.பன்னீர்செல்வம்தான் என்பதை அவர் உணர வேண்டும் என எச்சரிக்கிறார். விசாரணை நடந்தால் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஆபத்து என்கிறாரா? இந்த கூற்றே விசாரணை நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. விசாரணை நடைபெற்றால்தான் முழுமையான விவரங்கள் வெளிவரும்.

இவ்வாறு தீபாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.