வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 26 ஜூன் 2016 (16:56 IST)

’நாங்கள் உலகக் கோப்பையில் தோற்ற அணி போல’ - வைகோ அதிரடி

உலகக் கோப்பை போட்டிகளில் வெற்றிபெற்ற அணி தோல்வி அடைந்து விடலாம். தோல்வி அடைந்த அணி வெற்றி பெறலாம். இதே போன்று எங்கள் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ கூறியுள்ளார்.
 

 
மதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 24) மதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புஹாரி தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் நலக் கூட்டணி, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வைகோ பேசும்போது, ”அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் மதிமுக சார்பில் இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். தேர்தல் காலத்தில் சில கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் விலகிச் செல்லலாம்.
 
ஆனால் நாங்கள் 4 கட்சிகளும் நிரந்தர கூட்டு இயக்கமாக செயல்பட்டு வருவோம். இதை நாங்கள் முன்பே தெரிவித்துள்ளோம். மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து எங்கள் பயணத்தை தொடருவோம்.
 
மல்யுத்தத்திலே விழுந்து விடலாம். உலகக் கோப்பை, யூரோ கோப்பை போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அணி தோல்வி அடைந்து விடலாம். தோல்வி அடைந்த அணி வெற்றி பெறலாம். இதே போன்று எங்கள் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.
 
பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது, “இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சகோதர சமத்துவத்திற்கு வழிவகுக்கிறது. மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதுவை, மணல், கிரானைட் கடத்தலை முற்றிலுமாக ஒழிப்போம் எனக் கூறினோம்.
 
அதனால் மணல், கிரானைட் கடத்தல் கும்பல் எங்கே நம் தொழில் பாதித்து விடுமோ என்ற அச்சத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் அணிக்கு எதிராக செயல்பட்டார்கள்.
 
தேர்தல் அரசியலில் வெற்றி வரும் போகும். கையாண்ட உத்தி சில நேரம் பிழையாகலாம். ஆனால் அரசியல் லட்சியம் பிழையாகாது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பே தேர்தல் பணியை துவக்கி விட்டனர். மேலும் பல கோடி ரூபாய் செலவு செய்து தேர்தலை சந்தித்தனர்.
 
ஆனால் மக்கள் நலக் கூட்டணி 2 மாதம் மட்டுமே வேலை செய்து தேர்தலை சந்தித்தது. இந்த அணி தொலைநோக்கு பார்வையுடன் அமைக்கப்பட்டது. இந்த அணி உள்ளாட்சி தேர்தலையும் இணைந்தே சந்திக்கும்” என்று தெரிவித்துள்ளார்.