1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 19 மார்ச் 2017 (09:55 IST)

கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்க மாட்டோம் - திருமாவளவன் பளீர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு வாழ்த்து சொல்ல மட்டுமே இயலும். ஆதரிக்க மாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.


 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ”ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முடிவை அவர்கள் [மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி] தெரிவித்தனர். இன்றைக்கு வேட்பாளரை அறிவித்து இருக்கிறார்கள். அதில் வருத்தம் இல்லை.

இந்த இடைத்தேர்தல் களத்தில் அவர்களுடன் இணைந்து செயல்பட முடியாத நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் போராட்டக் களத்தில் நாங்கள் இணைந்து செயல்படுவோம். மற்றபடி கூட்டு இயக்கம் பின்னடைவை சந்திக்காது” என்றார்.

மேலும், மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பீர்களா? என்று கேட்டதற்கு, “போட்டியிட வேண்டாம் என்று கூறினோம். அந்த நிலைப்பாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக உள்ளது. மற்றப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு வாழ்த்து சொல்ல மட்டுமே இயலும். ஆதரிக்க மாட்டோம்” என்றும் தெரிவித்துள்ளார்.