வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (11:30 IST)

அதிருப்தியாளர்களுக்கு புதிய பதவிகள் - களம் இறங்கும் சசிகலா

தன்னுடைய தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு, புதிய பதவிகளை கொடுத்து அவர்களை தன் வசம் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இறங்கியுள்ளதாக தெரிகிறது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அவரது தோழி சசிகலா, அதிமுக பொதுச்செயலாளராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, அவரை முதல்வர் பதவியிலும் அமர வைக்கும் முயற்சியில், அவரின் கணவர் நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அதற்கு தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் வழி விடுவதாக தெரியவில்லை. அப்படியே விட்டாலும், தமிழக முதல்வராக சசிகலா அமர மத்திய அரசு ஆதரவு அளிக்காது எனத் தெரிகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் சசிகலா தரப்பு திண்டாடி வருகிறது.
 
ஒரு பக்கம் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிற்கு நாளுக்கு நாள் பெருகி வரும் ஆதரவும் சசிகலா தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சசிகலாவின் தலைமையை விரும்பாத அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் தீபாவின் பின்னால் செயல்பட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
 
இதில் பி.ஹெச்.பாண்டியன் உட்பட பலர் தீபாவிற்கு நேரிடையாக தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஆனல்,  செங்கோட்டையன், பொன்னையன், சைதை துரைசாமி போன்றவர்கள் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல்  மௌனம் காத்து வருகின்றனர். ஆனால், விரைவில் இவர்கள் தீபாவின் பக்கம் சாய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில், கே.ஏ.செங்கோட்டையன், சைதை துரைசாமி, கோகுல இந்திரா, கருப்பசாமி பாண்டியன், சோம சுந்தரம், வரகூர் அருணாச்சலம், நரசிம்மன் உள்ளிட்ட சிலரை அதிமுக அமைப்புச் செயலர்களாக சசிகலா இன்று நியமித்துள்ளார். அவர்களை அதிமுகவில் தக்க வைத்துக்கொள்ள சசிகலா தரப்பு இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.