செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 9 ஜூன் 2017 (10:00 IST)

எடப்பாடி அணியோடு இணைவோம் ; நெருக்கடி கொடுக்கும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி அணியோடு இணைவதே சிறந்தது என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கருதும் விவகாரம் ஓ.பி.எஸ்-ற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தம் என்ற பெயரில் போர்க்கொடி தூக்கிய ஓ.பி.எஸ் அணி இன்னும் தான் நினைத்த இலைக்கை அடையாமல் இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் தினகரன் சிறைக்கு சென்ற பின்பு கூட, ஓ.பி.எஸ் அணியிலால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. அவர்களின் முக்கிய கோரிக்கைகள் எடப்பாடி அணியினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும், 12 எம்.எல்.ஏக்களை தவிர புதிதாக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், எம்.எபி.க்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என எவரும் ஓ.பி.எஸ் அணிபக்கம் வரவில்லை.
 
தற்போது ஜாமீன் பெற்று வெளிய வந்துள்ள தினகரனை 35 அதிமுக எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அதில் 32 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாக தெரிகிறது. இந்த விவகாரம் ஓ.பி.எஸ் அணியினரை கலக்கத்தில் ஆழ்த்தியிருப்பதாக தெரிகிறது.
 
சசிகலா குடும்பத்தை எதிர்த்து களம் இறங்கிய போது மக்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவு ஓ.பி.எஸ் அணிக்கு இருந்தது. ஆனால், போகப்போக அந்த செல்வாக்கு சரிந்து போய்விட்டதை ஓ.பி.எஸ் அணி நன்றாகவே உணர்ந்திருக்கிறது. எனவே, சமீபத்தில் இதுபற்றி தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தினார்.


 

 
இதில், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் நாம், நம்முடைய அனைத்து ஈகோவையும் தூக்கி எறிந்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி பக்கம் செல்வதே சிறந்தது என ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வருகிற சட்டமன்ற தொடருக்கு முன்பே, முதல்வரை ஓ.பி.எஸ் என்று சந்தித்து பேச வேண்டும் என அவர்கள் விரும்புவதாகவும் தெரிகிறது. 
 
எனவே இதுபற்றி தீவிர ஆலோசனையில் ஓ.பி.எஸ் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. எனவேதான், எடப்பாடி அரசுக்கு எங்களால் எந்த ஆபத்தும் வராது என சமீபத்தில் ஓ.பி.எஸ் வெளிப்படையாகவே கூறினார். மேலும், இரு அணிகளும் விரைவில் இணையும் என ஆமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

எனவே இரு அணிகளும் விரைவில் மீண்டும் இணையும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
 
அரசியலில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நிகழலாம். யாரோடு யார் வேண்டுமானாலும் இணையலாம். ஆனால், அதில் நோக்கம் என்ன என்பதுதான் மக்கள் மனதில் எழும் கேள்வியாக இருக்கிறது.