வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : சனி, 7 ஜனவரி 2017 (16:52 IST)

தீபாவிற்காக வேலை பார்க்கும் விஜயபாஸ்கர்? - பதவி பறிக்கப்படுமா?

ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவின் வளர்ச்சிக்காக மறைமுகமாக வேலை பார்க்கும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பதவி விரைவில் பறிக்கப்படும் என கரூர் மாவட்ட அதிமுகவினரால் எதிர்பார்க்கப்படுகிறது.  


 

 
தற்போது அ.தி.மு.கவின் பொதுச்செயலாளாகவும் சின்னம்மா என்கின்ற சசிகலாவை, தமிழக முதல்வராக அமர வைக்க முயற்சிகள் நடப்பதால், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மறைமுகமாக தீபாவை வளர்த்து விடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
 
காரணம், சசிகலா பதவிக்கு வந்தவுடன் முன்னாள் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜிக்கு பதவி தரக்கூடும் என்ற விரக்தியில், கரூர் மாவட்டத்தை தீபாவின் கோட்டையாக மாற்ற சதி வேலையை தீட்டி வருவதாக அ.தி.மு.க வினர் பகிரங்க குற்றச்சாட்டு விடுத்துள்ளனர்.
 
இதுபற்றி கட்சி தலைமைக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளதால், விரைவில் கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி பறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் என்பவரது மகள் தீபாவிற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு நீடித்து வருகிறது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் பிளக்ஸ் மற்றும் பேனர்களோடு, போஸ்டர்களும் வைக்கப்பட்டுள்ளன. 


 

 
இந்நிலையில் இன்று கரூர் மாவட்டத்தில் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜூ, முன்னாள் மாவட்ட செயலாளரும், முதன்மை மாவட்ட ஆட்சியருமான காக்கர்லா உஷா ஆகிய குழுவினரிடன் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். 
 
ஒரு தமிழக முதல்வர் யாராக இருந்தாலும் மாண்புமிகு என்ற வார்த்தை உபயோகிக்க வேண்டும். ஆனால், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழக முதல்வர் என்று மொட்டையாக சொன்னதினாலும், மாண்புமிகு சின்னம்மா என கூறாதது அ.தி.மு.க வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இவர் அ.தி.மு.க வின் கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரையின் ஆதரவாளர் ஆவார். இப்படியிருக்க சசிகலாவை தம்பிதுரை ஆதரிக்கும் போது, விஜயபாஸ்கர் கட்டுப்பாட்டில் உள்ள கரூர் மாவட்டத்தில் ஏன், தீபாவின் போஸ்டர்களும், பேனர்களும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது எனவும், மாவட்ட அ.தி.மு.க வின் அலுவலகத்திலேயே சசிகலாவின் போஸ்டர்கள் கிழிக்கப்படுவது ஏன்? எனவும் சசிகலா ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


 

 
மறைமுக வேலையில் தீபாவிற்கு ஆதரவாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் களமிறங்கியுள்ளது, அ.தி.மு.கவினரை பெரும் குழப்பத்திற்கு ஆழ்த்தியுள்ளது. எது எப்படியோ கட்சி பணியில் சிறப்பாக பணிபுரியாதவர்களின் லிஸ்ட்டை, தற்போதைய பொதுச்செயலாளர் சசிகலா, ஜெ பாணியில் களை எடுக்கும் பணியில் தனது கவனத்தை செலுத்தி வரும் நிலையில் அதில் முதலில் அடிபடுவது கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெயர்தான் எனக் கூறப்படுகிறது.
 
மேலும், மற்றொரு விஷயமும் பூதாகரமாக கிளம்பியுள்ளதாம். எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொறுப்பு வகித்ததில் இருந்து கட்சி நிர்வாகிகளுக்கு எந்த ஒரு நல்லதிட்டங்களையும் செய்யாமலும், தன்னிச்சையாகவே செயல்பட்டு வந்தார் என்ற புகாரும் மேலிடத்திற்கு கூறப்பட்டுள்ளதாம். 

- சி.ஆனந்தகுமார்