வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: வியாழன், 9 மார்ச் 2017 (17:44 IST)

துணைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது - தினகரனை கலாய்த்த துரை முருகன்

அதிமுக துணைப் பொதுச்செயலாளருக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என திமுக துணைப் பொருளாலர் துரை முருகன் கிண்டலடித்துள்ளார்.


 

 
தமிழ்நாட்டில் பினாமி ஆட்சி நடைபெற்றுவதாகவும், குற்றம் சுமத்தப்பட்டு சிறைக்கு சென்றவரின் வழிகாட்டுதல் படி ஆட்சி நடைபெறுகிறது என திமுக துணை தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வந்தார். 
 
இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் “குற்றவாளிகளால் நடத்தப்படும் அரசு என குற்றவாளி கூடாரத்தின் செயல் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பல ஊழல்களை திமுக செய்துள்ளது என்பது மக்களுக்கு தெரியும். எப்படியாவது ஆட்சியை கலைத்து விடலாம் என முயற்சி செய்து, அது கை கூடாததால், ஸ்டாலின் இப்படி பேசி வருகிறார். அதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், தங்கத்தை உரசி பார்க்கும் தகுதி உரைகல்லுக்கே உண்டே தவிர துருபிடித்த தகரங்களுக்கு இல்லை என்று ஸ்டாலின் இனியாவது தெரிந்து கொள்ள வேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 
 
அவரின் இந்த அறிக்கை குறித்து, திமுக துணைப் பொருளாலர் துரை முருகனிடம் இன்று செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு துரைமுருகன்  ‘தினகரனா.. யார் அவர்?’ எனக் கேட்டார். அதற்கு அவர் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் என செய்தியாளர்கள் பதிலளித்தனர். அதற்கு துரைமுருகன், அப்படியா? எனக் கேட்டு விட்டு, துணைக்கெல்லாம் பதில் கூற முடியாது. அவருக்கெல்லாம் பதில் கூறி எனது தரத்தை நான் தாழ்த்திக் கொள்ள முடியவில்லை” எனக் கூறினார். இது கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.