வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (16:08 IST)

எடப்பாடி அணியுடன் இணைய வேண்டாம் : ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தில் முடிவு

அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த வேலையில், ஓ.பி.எஸ் அணி தனித்தே செயல்பட வேண்டும் என அவரின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


 

 
ஓ.பி.எஸ் அணி கொடுத்த நெருக்கடி காரணமாகவும், இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காகவும், தினகரன் தரப்பை கட்சியிலிருந்து விலக்கி வைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கிய அமைச்சர்கள் சமீபத்தில் முடிவெடுத்தனர்.
 
எனவே, அதிமுகவின் இரு அணிகளும் இணையும் சூழல் தென்பட்டது. ஆனால், ஓ.பி.எஸ் அணியில் முக்கிய கோரிக்கைகளை எடப்பாடி அணி ஏற்க மறுப்பதால் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கப்படாமல் இருக்கிறது. 
 
இந்நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூட்டம் செம்மலை எம்.எல்.ஏ தலைமையில் சேலத்தில் நடைபெற்றது. அதில், ஓ.பி.எஸ் அணி தனித்து செயல்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய செம்மலை எம்.எல்.ஏ கூறிய போது “ எடப்பாடி அணியுடன், ஓபிஎஸ் அணி இணையக்கூடாது என்பதே தொண்டர்களின் கருத்து. இதை அவரிடம் தெரிவிப்போம். எங்களின் கோரிக்கையை ஏற்று இன்னும் பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் இருக்கிறது. ஜெ.வின் மரணத்திற்கு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். சசிகலா குடும்பத்தினரை வெளியேற்ற வேண்டும். 
 
இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் பேச்சு வார்த்தை நடத்தலாம். இல்லையெனில், பன்னீர் செல்வம் தலைமையில் விரைவில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும். தொண்டர்களின் உணர்வை தீர்மானமாக நிறைவேற்றி உள்ளோம். நாங்கள் ஓ.பி.எஸ் பக்கம் நிற்போம்” என அவர் தெரிவித்தார்.