1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2017 (12:21 IST)

ஆர்.கே.நகர் தேர்தல்; சசிகலா தரப்பில் போட்டியிடப் போவது யார்? -நீடிக்கும் குழப்பம்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக தரப்பில் யார் போட்டியிடப் போகிறார் என்ற குழப்பம் நிகழ்கிறது.


 

 
ஜெ.வின் மறைவை அடுத்து, வருகிற ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஜெ.வின் மறைவிற்கு பின் தீபா அணி, ஓ.பி.எஸ் அணி, தினகரன் அணி என அதிமுக 3 அணிகளாக பிரிந்து நிற்கிறது. அவர்கள் அனைவரும் நாங்களே ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெறுவோம். அந்த தொகுதி மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என நம்பிக்கையோடு கூறி வருகிறார்கள். 
 
இதில், ஆர்.கே.நகரில் தீபா போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அதேபோல், ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ஆனால், அதிமுக சார்பில் யார் போட்டியிடுகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. 
 
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட பின், அவரே ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு சென்றுவிட்டதால், அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தினகரன் பெயர் அடிபட்டது. அதேசமயம், ஏற்கனவே அந்நிய செலவாணி வழக்கில் சிக்கியுள்ள அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் செய்திகள் வெளிவந்தன. 
 
ஒருபுறம் தினகரன் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட தயக்கம் காட்டி வருவதாகவும் செய்திகள் உலாவந்தன. ஏனெனில், அங்கு போட்டியிட்டு, தோல்வியுற்றாலோ, ஒபிஎஸ் அணியை விட குறைந்த வாக்கு வாங்கினாலோ அவரது அரசியல் வாழ்க்கைக்கு அது இடையூறு ஏற்படுத்தும் என அவரது நெருங்கிய நண்பர்கள் எச்சரிக்கின்றனராம். மேலும், அந்த தொகுதியை சார்ந்த கட்சியினரும் போட்டியிட ஆர்வம் காட்ட மறுப்பது மேலிட நிர்வாகிகளை கவலை கொள்ள செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில், தீபாவிற்கும், ஓ.பி.எஸ் அணிக்கும் எதிராக, தீபாவின் அண்னன் தீபக்கை முன்னிறுத்த சசிகலா தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் சில செய்திகள் வெளியாகின. ஏனெனில், சசிகலா தரப்பிற்கு திடிரென எதிர்ப்பு காட்டத் தொடங்கி இருக்கும் அவரை சரிகட்ட இப்படி முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதுவரை அதிமுக சார்பில் யார் போட்டியிடுகிறார் என்ற மர்மம் நீடித்து வருகிறது. 
 
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன், கட்சி நிர்வாகிகளோடும், அமைச்சர்களோடும் ஆலோசனை நடத்தி வருகிறார். எனவே, இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.