செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : சனி, 10 டிசம்பர் 2016 (13:12 IST)

சசிகலா பேனரை தூக்குங்க - அதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் (வீடியோ)

திருவெற்றியூரில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிற்கு ஆதரவாக வைக்கப்பட்டிருந்த பேனரை, அதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி அப்புறப்படுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து, அவரின் தோழி சசிகலாவை தலைமை பதவியில் அமர வைக்கும் முயற்சிகளில் பல விசுவாசிகள் இறங்கி விட்டனர். 
 
அதன் எதிரொலியாக, தமிழகமெங்கும் ‘சின்னம்மா பேரவை’ என்கிற பெயரில் சசிகலாவிற்கு ஆதரவாக பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. சசிகலாவை முன்னிறுத்துவதை அதிமுகவின் சில சாரார் ஏற்றுக்கொள்ளவில்லை.
 
இந்நிலையில், திருவெற்றியூர் தாங்கல் தியாகராயபுரத்தில் நேற்று ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் சசிகலாவின் உருவப்படம் இட்டு,  ‘சின்னம்மாவின்  வழி நடப்போம்’ என்கிற ரீதியில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
 
இதனக் கண்டு ஆத்திரம் அடைந்த அந்தப் பகுதியில் வசிக்கும் அதிமுக மகளின் அணியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அங்கு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த பேனரை அங்கிருந்து அகற்றவேண்டும் என அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும், அந்த பேனரை வைத்த நபருடன் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். ஜெயலலிதா இருந்த இடத்தில் சசிகலாவை ஏற்க மாட்டோம் என அவர்கள் உறுதி படக்கூறினார்கள்.
 
மேலும், திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு விரைந்த போலீசார், மாநகராட்சி அதிகாரிகள்  மூலம் அந்த பேனரை அங்கிருந்து அகற்றினர். அதன்பின் அவர்கள் சாலை மறியலை கை விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
 
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.