வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : திங்கள், 2 ஜனவரி 2017 (13:27 IST)

அதிமுகவில் இனி பிரச்சனைகள் வெடிக்கும் - எம்.ஜி.ஆர் உறவினர் கருத்து

அதிமுக கட்சியில் இனிமேல் பெரிய பிரச்சனைகள் உருவாகும் என மறைந்த எம்.ஜி.ஆரின் உறவினர் தீபன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
முதல் மரியாதை படத்தில் ரஞ்சனிக்கு ஜோடியாக நடித்திருந்த தீபனை யாரும் அவ்வளவு எளிதாக  மறந்திருக்க முடியாது. இவர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளின் தம்பி மகன் ஆவார். எம்.ஜி.ஆர் மறைந்த போது, அவரது உடலை சுமந்து சென்ற ராணுவ வாகனத்தில் ஏறிய ஜெயலலிதாவை கீழே  தள்ளியது இவர்தான்.  
 
இந்நிலையில், சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து அவர் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
 
சசிகலா அதிமுக பொதுச்செயலாளாராக பொறுப்பேற்றுக் கொண்டதில் பல அதிமுகவினருக்கு உடன்பாடு இல்லை.  அனைவரையும் மிரட்டித்தான் அவர் அந்த பதவிக்கு வந்துள்ளார். இரட்டை இலை சின்னம் கை விட்டு போய் கூடாது என்பதற்காகவும், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் தான், பல அதிமுக நிர்வாகிகள் அமைதியாக உள்ளனர். 
 
தனது சொந்த தேவைகளுக்காக ஜெயலலிதாவை பயன்படுத்திக் கொண்டவர்தான் சசிகலா. அவரை பின்னால் இருந்து நடராஜன் இயக்குகிறார். நடராஜனை கட்சிக்குள்ளே விடக்கூடாது என்றுதான் ஜெயலலிதா அவரை ஒதுக்கி வைத்திருந்தார். ஆனால், அவரை சசிகலா தற்போது மீண்டும் கொண்டு வந்து விட்டார்.  இனிமேல் அவர் சொல்வதைக் கேட்டுதான் நடக்கப் போகிறார்கள். இனி கட்சியில் பெரிய பிரச்சனைகள் உருவாகும். 
 
அடுத்து 4 வருடங்களுக்கு என்ன நடக்குமோ என அதிமுக எம்.எல்.ஏக்கள் பயப்படுகிறார்கள். மக்கள் மத்தியில் சசிகலாவிற்கு செல்வாக்கு கிடையாது” என அவர் கூறினார்.