1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2015 (19:36 IST)

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் இணையதளத்தை முடக்கிய வயகரா விளம்பரம்

தனது தீவிரவாத தாக்குதல்கள் மூலம் உலகையே ஆட்சி செய்ய நினைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை முடக்கிய மர்மநபர்கள், அப்பக்கத்தில் வயாகரா விளம்பரத்தை பதிவேற்றம் செய்துள்ளனர்.
 

 
அப்பாவி பிணைக் கைதிகளின் கழுத்தை அறுத்து அந்த வீடியோவை பதிவேற்றி மிரட்டுவது, தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவது, மனித வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்வது, பிரபல நிறுவனங்களின் இணையப் பக்கங்களை முடக்குவது என ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் உலகத்தை அச்சுறுத்தி வந்தனர்.
 
இதற்கு பாரிஸ் தாக்குதல், சீனா தேசத்தை சேர்ந்த நபர் கொலைசெய்யப்பட்டது உள்ளிட்ட சம்பவங்கள் சரியான உதாரணம். அத்தகைய, பயங்கரத்தை அரங்கேற்றிய இயக்கத்தின் இணையதளப் பக்கம் முடக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
 
நவம்பர் 24ஆம் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ்.-இன் இணையதளப் பக்கத்தை முடக்கிய அந்த பெயர் தெரியாத குழு, அந்த இணையதள பக்கத்தில் வயாகரா மாத்திரைகளின் விளம்பரத்தை பதிவேற்றியுள்ளது.
 
மேலும் அந்தப் பக்கத்தில் “ஐஎஸ்ஐஎஸ் இயக்கமே போதும். உங்களுடைய இயக்கத்தில் நிறைய தீவிரமான ஆட்கள் இருக்கிறார்கள். இப்போது இதை தீவிரமாக படித்துக் கொண்டிருப்பவர்கள் கீழே இருக்கும் விளம்பரத்தை அழுத்துங்கள் (வயாகரா விளம்பரம்) அமைதி அடையுங்கள்” என்று கேலியாக எழுதப்பட்டிருந்தது.